
பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 90 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம். கல்விமுறையில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டாலும் பல நூற்றாண்டுகளைக் கண்ட இந்த பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் மீண்டும் செயற்பட வேண்டும் என்பது பல சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது. அவர்களது ஆவல் இப்போது நிறைவேறியுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ் கூறும் இந்த பல்கலைக்கழகத்தில் சீனர்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், திபெத்தியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து அறிஞர்களாக திகழ்ந்தனர். உலக அளவில் உயரிய பதவிகளைப் பெற்று, சிறந்து விளங்கினர்.
உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறையைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்றனர். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கி, படித்த முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.
கி.பி. 413 முதல் சிறப்பாக செயற்பட்ட இந்த பல்கலைக்கழகம், படையெடுப்பாளர்களால் மூன்று முறை தாக்கப்பட்டு, இரண்டு முறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
கி.பி.1193இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தபோது தான் நாளந்தா பல்கலைக்கழகம் செயற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கி.பி 455இல் ஸ்கந்தகுப்தா ஆட்சிக் காலத்தில், மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்பின்போது தாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு, பல காலம் கல்வி சேவை ஆற்றியது.
பின்னர், ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்தன ஆட்சியின்போது, இரண்டாவது முறையாக கவுடர்களால் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புத்த பல்கலைக்கழகத்தால் மறுசீரமைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக, 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் இராணுவம் என்ற துருக்கிய படையால் சூறையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 14 ஹெக்டேயர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டிடம் செங்கற்களால் ஆனது.
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பீஹார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிப்பதற்கான மசோதாவை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்மொழிந்தார்.
பின்னர், 2010ஆம் ஆண்டில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு நேற்று முதல் இந்த பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் செயற்பட ஆரம்பித்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று காலை 9 மணிக்கு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுபுறவியல் குறித்த வகுப்புகள் மற்றும் வரலாற்று வகுப்புகள் ஆரம்பமானது.
இந்த பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு உலக அளவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து 15 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 11 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 14ஆம் திகதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜால், நாளந்தா பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் கற்றல் நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பல்கலைக்கழகத்தின் பழைய தோற்றம்
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply