blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 21, 2014

மாகாண சபைக்கான அதிகாரங்களை மத்தியரசு வசப்படுத்த இடமளிக்க முடியாது -சிவி

மாகாண சபைக்கான அதிகாரங்களை மத்தியரசு வசப்படுத்த இடமளிக்க முடியாது -சிவி

ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் ஊடாக, சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் இணைத்தலைமையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.

வடக்கு மாகாணசபைக்கு முதன்முறையாக தேர்தல் நடைபெற்று மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.

வடக்கு மாகாணசபைக்கு முதன்முறையாக தேர்தல் நடைபெற்று மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.

இதில் இணைத் தலைமை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கு பற்றாமல் புறக்கணித்திருந்தனர்.

இந் நிலையில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இணைத்தலைமை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது.

இணைத்தலைவராக முதலமைச்சர் பங்குபற்றி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணைத்தலைவராக நான் பங்குபற்றும் முதற் கூட்டமிது. சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுகின்றேன்.

இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலினாலும், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலினாலும் வடமாகாணத் தேர்தல் சென்ற வருடம் செப்ரெம்பர் மாதத்தில் நடைபெற்றது.

அதில் எமது தமிழ்த் தேசியக் கூட்டணியும் பங்குபற்றியது. அந்தத் தேர்தலில் அரசாங்க உபகரணங்கள், சலுகைகள் போன்ற யாவற்றையும் பாவித்து, மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெரும்பாலானோரைக் கொண்டு வந்து எமது ஆளுநரின் நேரடியான உதவிகளையும், அனுசரணைகளையும் பெற்றுக் கொண்டு, சட்டத்திற்கு முரணான வகையில் தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி மஹிந்த சிந்தனையை முன்வைத்தும், வடமாகாணத்தில் இன்றைய அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டுமாணப் பணிகளை முன்வைத்தும் அரசாங்கம் தேர்தலில் பங்கேற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போருக்குப் பின்னரான மக்களின் தேவைகளையும், முன்னுரிமைகளையும் அடையாளங் காட்டி நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் போரின் பின்னரான குறுகிய கால, நீண்ட காலத் தேவைகளை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டுப் பூர்த்தி செய்வோம் என்று கூறித் தேர்தலில் பங்குபற்றினோம்.

எமது அரசியல் ரீதியிலான தீர்வையும் முன்வைத்தோம். அதாவது வன்முறை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம். ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வே நாட்டுக்கு நலமுடைத்து என்பதே எமது கோஷமாக இருந்தது.

மஹிந்த சிந்தனை உள்ளடங்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்து, போரின் பின்னர் எமது மாகாணத்தைக் கட்டியெழுப்பவும், புனர் நிர்மாணத்தில் ஈடுபடவும், நாட்டில் சமரசத்தை ஏற்படுத்தவும் நாம் முன்வைத்த எமது கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

நாம் தேர்தலில் வென்ற சில வாரங்களினுள் எமக்கொன்று புலப்பட்டது. மத்திய அரசாங்க ஆளும் கட்சி தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீர வேண்டும் என்ற பாணியில்த்தான் நடவடிக்கைகள் சென்று கொண்டிருப்பதை அவதானித்தோம்.

இது இவ்வாறிருந்துங்கூட நாங்கள் 2013ம் ஆண்டு ஒக்ரோபர் மாதந் தொடக்கம் 2014 ஜனவரி வரையில் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டோம். இவ்வருடம் ஜனவரி 2ந் திகதி மாண்புமிகு ஜனாதிபதியை சென்று சந்தித்தேன்.

அத்தருணத்தில் 13வது திருத்தச் சட்டத்தின் வலுவின்மையைச் சுட்டிக்காட்டி அதன் கீழான கட்டமைப்புக்கள் போதியவாறான அதிகாரங்களைத் தராத பட்சத்திலுங் கூட போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்கருதி நாங்கள் ஒத்துழைக்க முன்வந்துள்ளோம் என்ற கருத்தைத் தெரிவித்தேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது பற்றிய எமக்குச் சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி இதுவரை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதியாமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தி வருகின்றன.

ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்குந் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அவ்வந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன்.

அவ்வாறு நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர். இது ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

ஜனவரி 2ந் திகதி சந்திப்பின் போது எல்லா மாகாண சபைகளையும் ஒரே மாதிரியாகவே தாங்கள் நடத்திச் செல்வதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நான் கூறினேன்- வடமாகாணம் மற்றைய மாகாணசபைகள் போல் அல்லாது போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளதால் அதன் பிரச்சனைகளும், தேவைகளும் விசேடமானதும், தனித்துவமானதும் என்று.

அத்துடன் அவற்றிற்கான தீர்வுகள் பிற மாகாணப் பிரச்சினைகளைத் தீர்ப்பது போலல்லாது வேறு விதமாக அமைந்திருப்பன என்பதையும் சுட்டிக் காட்டினேன்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான சப்பாத்து சைஸ் பொருந்தும் என்று நினைப்பது தவறு என்றுங் கூறி வைத்தேன்.

மேலும் ஒரு விடயம் இங்கு கூறப்பட வேண்டும். 1987ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 13வது திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்திய இலங்கை - இந்திய இணக்கப்பாட்டு ஆவணம் கையெழுத்திடப்பட்ட போது சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது வடகிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே முன்வைக்கப்பட்டது.

மற்றைய மாகாணங்களின் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டல்ல. ஆனால் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் உருவாகக் கூடுமென நினைத்து முழு நாட்டுக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தப்; போவதாக இந்தியாவிற்கு அறிவித்தார்.

இதன் காரணத்தால் வடக்குக் கிழக்கிற்குக் கிடைக்க வேண்டிய சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமலே போயுள்ளது.

தற்போது 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதாக்கி மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு;ள்ளதாகக் காணக் கூடியதாக உள்ளது.

இதற்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டம் சான்று பகிர்கின்றது. மாகாணசபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கைவைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது.

ஆகவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டை இப்பேர்ப்பட்ட ஒரு எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே நாம் காண்கின்றோம். அதாவது மத்திய அரசாங்கத்தின் கை மாகாண சபையின் நடவடிக்கைகளில் மேலோங்கும் வண்ணமாகவே ஜனாதிபதி செயலணி, மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகத் தெரிகின்றது.

அதாவது தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தற்போதைய பலங்குன்றிய சட்டங்கள் அவர்களுக்கு அளித்திருக்குஞ் சொற்ப உரிமைகளையும், அதிகாரங்களையுஞ் சீரழிக்கும் வண்ணமாகவே இவ்விரு செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நாங்கள் காண்கின்றோம்.

மேலும் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த, வரும் செயற்றிட்டங்களும், திட்ட அமுலாக்கங்களும் வடமாகாண சபையின் கருத்தொருமித்தல் இல்லாது அவசர அவசரமாகக் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதந் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அச்சத்துடன் அவதானிக்கின்றோம்.

இந்தப் பின்னணியில்த்தான் இதுவரை நாங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றாது இருந்து வந்தோம். அதுபற்றி அரசாங்கம் எம்மை விமர்சிக்கவுந் தவறவில்லை. ஆனால் விசித்திரமாக மன்னார், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு நாங்கள் வருவதாக அறிவித்ததும் இருமுறை அக்குழுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

என்றாலும் மக்கள் ஆக்ஞையைப் புறக்கணிக்காது நாங்கள் வடமாகாண சபையின் நிர்வாகச் செயற்பாட்டில் உள்ளிடுவது அவசியம் என்று கருதி தற்பொழுது எமது முடிவை மாற்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டங்களில் பங்குபற்ற முன்வந்துள்ளோம்.

எமக்கு எம் மக்களின் போரின் பின்னரான தேவைகளும், முன்னுரிமைகளுமே மிக முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. அவற்றை முன்னிறுத்தவும், முடித்துக் கொடுக்கவுமே எம்மை ஜனநாயக ரீதியில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்களை வீணடிக்காது எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மாறாக மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின்நிற்க மாட்டோம்.

வடமாகாணசபை இதுவரையில் என்ன செய்தது என்று கேட்போருக்கு இரண்டு பதில்கள் கூறுகின்றேன். எமது ஒவ்வொரு அமைச்சும் கடந்த ஆறு மாதங்கள் செய்த வேலைகளைக் கைநூல்களாக வெளியிடுகின்றன.

அதே நேரத்தில் இன்னொன்று கூற விரும்புகின்றேன். நாங்கள் பதவியில் இருந்தால் மட்டும் போதும் - எங்கே தம்மையும் தம்; சகாக்களையும் அடுத்த தேர்தலில் மக்கள் ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயத்தில் அரசாங்கம நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செயலாற்றத் துணிந்துள்ளார்கள்.

யார் நெல்லைக் குற்றினாலும் நெல் அரிசியாக வேண்டும். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம் என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►