இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரா் சச்சின் டெண்டுல்கர் மும்பையிலுள்ள பாடசாலை ஒன்று ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார். அப்போது அவர் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவு கூர்ந்தார்.
”1992ம் ஆண்டில், எனக்கு 19 வயதாக இருந்தபோது அவுஸ்ரேலிய சுற்றுப்பயணத்துக்கு சென்ற இந்திய அணியில் நானும் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். அந்த நாட்டின் பேர்த் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டிருந்தன.
வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க கூடியது பேர்த் மைதானம். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்து எகிறி நெஞ்சு அளவுக்கு வரும். பந்தை எறிந்து பிட்சில் அது விழுந்தபிறகு அதன் வேகம் மேலும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது பேர்த் மைதானம்.
எனவே பேர்த் மைதானத்தில் சாதித்தால் உலகின் எந்த ஒரு மைதானத்திலும் துடுப்பெடுத்தாடுவது எளிதாகிவிடும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே மிகவும் பொறுமையாக, கவனமாக ஆடினேன். அந்த போட்டியில் 114 ஓட்டங்களை எடுத்தேன்.
இந்த சதம்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது. தன்னம்பிக்கை மற்றும் திறமை இரண்டும் இணையும்போது உலகில் அனைத்தையும் சாதிக்க முடியும். இவ்விரண்டையும் இணைத்துதான் நான் கிரிக்கெட்டில் முன்னணி இடத்துக்கு வந்தேன்.
எனது தந்தைக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஈடுபாடு இல்லாதபோதும் என்னை அவர் பெரிதும் ஊக்குவித்தார்.
இந்த விடயத்தில் எனது சகோதரர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.
என்னைப் போலவே எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் கொண்டுள்ளான்.
அவனிடம் எதை செய்தாலும் அதில் உறுதியான ஈடுபாடு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.
எனது மகள் சாரா தனது தாயை போல் மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ளார். தனக்கு விருப்பமானதை தேர்வு செய்ய அவருக்கும் முழு சுதந்திரம் அளித்துள்ளேன். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply