
இந்த வருட ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்காக சவுதி அரேபியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 200 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் பிரதி அமைச்சர் ஒருவரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக அஸாத் சாலி குறிப்பிடுகின்றார்.
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன் பிரகாரம் தாம் பெற்றுக்கொண்ட பேரீச்சம்பழ தொகையை புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்காக அமைச்சர்களிடையே போட்டி நிலவுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை விற்பனை செய்வது தடையாகும் என அவற்றின் உரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதுடன், அவை இலவசமாகவே விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் அஸாத் சாலி குறிப்பிடுகின்றார்.
ஆயினும், அன்பளிப்பாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஊடாக குறிப்பிட்ட பேரீச்சம் பழ தொகையை சுற்றிவளைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மெற்கொள்ளுமாறும் மத்திய மாகாண சபை உறுப்பினர், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply