நாடாளுமன்றத்தில்
அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு
மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம்பகரமான
வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதகாலத்திற்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கிலேயே இந்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வில்பத்து வனப் பிரதேசத்தத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கலந்துரையாடப்பட்டுள்ளது.
முஸ்லிம் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டம் மருதானை பூகோஸ் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமா ஹசன் அலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஹசன் அலி எம்.பி உரையாற்றுகையில்;
முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசின் கவனத்திற்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமாத காலத்திற்கு சபையமர்வை பகிஸ்கரிக்கவேண்டும். இந்த செயற்பாடுகளுக்காக முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழுத்தம்கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பகிஸ்கரிப்பதன் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply