திவிநெகும திட்டத்தில் 400 கோடி ரூபாவை சுருட்டியது, பாதுகாப்பு பெட்டகங்களை கொண்டு திறைசேரியை சுரண்டியமை உள்ளிட்ட பாரிய ஊழல் மோசடிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுமே காரண கர்த்தாக்களாவர் என்று முன்னாள் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திடம் நேற்று(17) சனிக்கிழமை முறைப்பாட்டை செய்துவிட்டு அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“ஊடகங்களை நிந்திக்கும் வகையில், இரு சந்தர்ப்பங்களில் நான் ஊடகங்களுக்கு எதிராக கூடாத வசனங்களை பயன்படுத்திவிட்டேன். நான் யோசித்து, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவற்றை கூறவில்லை. என் அடிமனத்திலிருந்த கோபத்தினாலும் எனது ஆவேசமான செயற்பாட்டினாலும் நான் அவ்வாறு நடந்துகொண்டேன்.
அதற்காக சகல ஊடகங்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன். நான், ருகுணு பெலியத்தையைச்சேர்ந்த நல்லதொரு சிங்கள பௌத்தன்.
என்னிடம் வைராக்கியம் இல்லை. ருகுணுவை சேர்ந்தவன் என்பதனால் வைராக்கியம் இருக்காது. ஆனால், வைராக்கியம் வைத்துவிட்டால் கடுமையாக காயப்படுத்தாமல் விடவும் மாட்டேன். இந்த கோட்டாபயவும் பசிலும் என்னை கீறி, கீறி காயப்படுத்தியவிட்டனர்.
கடுமையாக காயப்படுத்திவிட்டனர். என்னுடைய சட்டத்தரணியான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் மருமகனுடன் சென்றே இந்த முறைப்பாட்டை செய்தேன்.
நான், பெலியத்தையைச்சேர்ந்தவன் என்பதனால் இதற்கு பின்னர் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். என்னுடைய குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். நான் செத்தால் நரியாக சாகமாட்டேன். சிங்கமாகவே சாவேன்.
எனக்கு யாருடனும் தனிப்பட்ட வைராக்கியம் இல்லை. நானும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் எனது மாமாவின் காரில் ஒன்றாகதான் கொழும்புக்கு வந்தோம். நான் வேலைச்செய்வதற்கு உருப்படியான அமைச்சு ஒன்றுகூட வழங்கப்படவில்லை.
களனி பிரதேச சபைக்குள் சூழ்ச்சிகளை செய்து என்னை அங்கிருந்து விரட்டுவதற்கு பசில் ராஜபக்ஸ முயற்சித்தார்.
நான் அப்போது இருந்தே தயாராகிவிட்டேன். லசந்த விக்ரமதுங்க, (சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்), பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர (முன்னாள் அமைச்சர்), ராகமை லொக்கு சியா, வெள்ளை வான் சம்பவங்கள் ஆகியவற்றிற்கு காரணம் கோட்டாபய ராஜபக்ஸ, ஆம் இதனை நான் பொறுப்புடன் தான் கூறுகின்றேன்.
சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடகநிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிந்துவைத்திருந்தார்.
உண்மையை கூறினால் நான் செத்தாலும் பரவாயில்லை. உண்மையை கூறுவேன். எனக்கு எதிராக ஒரு சிறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கமுடியாது. நான் பெண்களை திருடவில்லை. ஊழல் பேர்வழியான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஸவுக்கு டுபாயில் மெரியட் என்றொரு பெயரில் ஹோட்டல் இருக்கின்றது.
உடவல வீதி தனமன்விலவில் பெரிய ஹோட்டல் ஒன்று இருக்கிறது. அது அவருடைய மருமகனுடையது. கிட்டத்தட்ட 20 அல்லது 13 ஏக்கர் விசாலமானதாகும். மல்வானையில் 23 ஏக்கரில் வீடொன்று இருக்கின்றது. கம்பஹா ஒருத்தொட்டவில் விசாலமான காரியாலயமொன்றும் இருக்கின்றது. இவை இரண்டையும் தனியார் நிறுவனங்கள் இரண்டே நிர்மாணித்துக் கொடுத்தன.
கோல்பேசில், அவருடைய மனைவிக்கு பங்குகள் இருக்கின்றன. திவிநெகும திட்டத்தின் ஊடாக 400 கோடி ரூபாய் சூரையாடப்பட்டது.
வங்கியை உடைத்தால் சிறைக்கு செல்லவேண்டும். எனினும், திணைக்களங்களிலிருந்து வங்கிக்கு பணத்தை பாதுகாப்பாக எடுத்துவருவதாக கொண்டுசெல்லப்படுகின்ற பாதுகாப்பு பெட்டகங்களை பயன்படுத்தி திறைச்சேரி உடைக்கப்பட்டது. அந்த பணம் யாவும், பசில் ராஜபக்ஸவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டன.
இவையாவும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பயந்துகொண்டிருக்கின்றார்கள். நான் பயப்படமாட்டேன்.
அதனால் தான் உண்மையை கூறுகின்றேன். இந்த ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாட்டுமக்களுக்கு நன்கு தெரியும். நல்லாட்சியுடன் நான் முன்னரே இணைந்துகொண்டேன்.
நானும் ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரே முதன்முதலில் கலந்தாலோசித்தோம்.
எனது மகனை யோசித்த ராஜபக்ஸவே அடித்தார் (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன்) யோசித்தவுடன் இருக்கும் உயரமான மேயர் ஒருவரே எனது மகனை காலிக்கு கொண்டுசென்றார் கொல்வதற்காக, மகனுக்கு தப்பிக்கதெரியும் என்பதனால் அவர் தப்பித்துவிட்டார். ஹோட்டல் சம்பவத்தையடுத்து அங்கு பதிவாகியிருந்த காட்சிகள் யாவும் கோட்டாபாயவின் உத்தரவின் பேரில், அழிக்கப்பட்டுவிட்டது.
எனது மகனை ஒரு மாதமாக வைத்தியசாலையில் வைத்திருக்குமாறும் அவரை வெளியில் விடவேண்டாம் என்றும் கோட்டாபயவே உத்தரவிட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் பொலிஸாரிடம் இருக்கின்றன.
அவர்கள் சாட்சியமளிப்பர். யாரையும் பலியெடுக்கவேண்டிய தேவை எனக்கில்லை. பலியெடுக்க வேண்டும் என்றால் அதற்கொரு முறையிருக்கின்றது. பெலியத்தைகாரனுக்கு அதுவும் தெரியும். தலை வீங்காமல் நாட்டை நல்லாட்சியில் கொண்டு செல்லவேண்டும்.
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பசில் ராஜபக்ஸவும் கோட்டாபய ராஜபக்ஸவும் என்னனென்ன செய்கின்றார்கள் என்று நன்றாகவே தெரியும். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் நல்லாட்சியை செய்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியை விட்டுசென்றிருக்கமாட்டார்.
மைத்திரிபால சிறிசேனவை, புலிகளிடம் கூறி கொலை செய்வதற்கு பசில் ராஜபக்ஸ முயற்சித்தார்.
பொலன்னறுவையில் இருந்து வந்த மைத்திரிபால சிறிசேன மொரஹாகந்த நீர்த்தேக்க திட்டத்தை திறந்துவைக்க வேண்டுமா என்ற ராஜபக்ஸர்களின் கூடாத சிந்தனையால், மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது, மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சு பதவியில்லை.
எனக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது நம்பிக்கையிருக்கின்றது. அரசியல் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல் மோசடிகள் இன்றி நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
பழிவாங்க மாட்டார்கள், வரலாற்றில் பதியும் படி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள். ஊடக சுதந்திரம் கிடைக்கும். தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்கும். இல்லாதவர்களுக்கு கிடைக்கும் போதும் இருக்கின்றவர்களிடம் இல்லாமல் போகும் போதும் பிரச்சினையாகும்.
நான் இங்கிருந்து போகும் போது குண்டடிப்பார்கள். உண்மையை கூறுவதனால் எனக்கு மரணத்துக்கு பயமில்லை”
No comments:
Post a Comment
Leave A Reply