இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகின்றது.ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இன்று உத்தியோகபூர்வமாக தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று விசேட நிபுணர்களாக, மார்ட்டி அத்திசாரி, சில்வியா கட்ரைட் மற்றும் அஸ்மா ஜஹங்கிர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் விசாரணைகள் இடம்பெற்றபோதும் இன்று தொடக்கமே விசாரணைக்குழு உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ளது. விசாரணைக் குழு 10 மாதங்களுக்கு இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்கவுள்ளது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 28 ஆவது அமர்வில் இந்த விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எனினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 27 ஆவது அமர்வில் இவ்விடயம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்குள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply