
153 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகொன்றை இலங்கை கடற்படையினரிடம் அவுஸ்திரேலியா கையளித்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அவுஸ்திரேலிய வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் டொனி அபொட் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
படகுகளை திரும்பியனுப்புவது அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் ஒன்று எனவும், அதற்கான உரிமை அவுஸ்திரேலியாவிற்கு இருப்பதாகவும், மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு நாடாக இலங்கை திகழ்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
153 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு தொடர்பில் தேசிய லிபரல் கூட்டணி அரசாங்கம் மௌனம் காப்பது தொடர்பில் 3AW வானொலி செவ்வியில் வினவியபோதே, டொனி அபொட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அந்த நடவடிக்கை அகதிகள் தொடர்பான பிரகடனத்தின் விதிமுறைகளை அவுஸ்திரேலியா மீறும் செயலாக அமையுமென மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி ஜூலியன் பேர்ன்சைட், சிட்னி மோர்னிங் ஹெரால்ட் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை ஒப்படைப்பது, ஐ.நாவின் அகதிகள் தொடர்பான பிரகடனத்தை கடுமையாக மீறும் செயலாக அமையும் என சர்வதேச சட்டங்கள் தொடர்பான நிபுணர் டொனால்ட் ரொத்வெல் டெலிகிராப் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கு அமைய, அகதி அந்தஸ்து உறுதிப்படுத்தப்படாமல், தன்னை அகதி எனத் தெரிவிக்கும் ஒருவர் புகலிடக் கோரிக்கையாளராக கருதப்படுகின்றார்.
உரிய நடைமுறைகளுக்கு அமைய, அகதி என அங்கீகரிக்கப்படாத மற்றும் சர்வதேச பாதுகாப்பு அவசியமற்ற ஒருவர் தனது சொந்த நாட்டிற்கு மீள அனுப்பிவைக்கப்படலாம்.
இந்த விடயம் தொடர்பில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியாவின் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிராந்திய அலுவலகத்துடன் நியூஸ்பெஸ்ட் தொடர்புகொண்டது.
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை கோரி பயணித்தவர்களுடன் தொடர்புபட்டவர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படகு இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து பயணத்தினை ஆரம்பித்திருந்ததாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply