அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ) இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த 'முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடல் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வைத் தடைசெய்யுமாறு கோரி கல்முனை பொலிஸார் இன்று கல்முனை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வழக்கை மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, கல்முனை பொலிஸார் மெஸ்ரோ நிறுவனம் இன்று நடத்தவிருக்கும் இந்த நிகழ்வினால் கல்முனை பிரதேசத்தின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும்.
இவ்வமைப்பு கடந்த மூன்று நாட்களாக இந்நிகழ்வை நடத்த முயற்சித்தபோது தடைசெய்தது போல் இன்றும் இந்நிகழ்வைத் தடைசெய்ய வேண்டும் என கோரினர்.
இதனை ஆட்சேபித்து மெஸ்ரோ நிறுவனத்தின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான எம்.முஸ்தபா,எம்.ஹாதி ஆகியோர் இன்றைய நிகழ்வு அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் மரணித்த உறவுகளுக்கும், அம்மக்களின் பாதுகாப்புக்கும் இறைவனின் உதவிகோரி துஆப் பிரார்த்தனையும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இவ்வாறான நிகழ்வுகளின் போது எவ்வாறு நடந்து கொள்வது பற்றி புத்திஜீவிகளைக் கொண்டு மக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வாகுமே தவிர, இது இனமுறுகலையும், கல்முனையின் அமைதியின்மையையும் சீர்குலைக்கும் நிகழ்வல்ல. இது பொலிஸாரின் சோடனையாகும் என வாதித்திட்டனர்.
மேலும் மெஸ்ரோ நிறுவனம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்துவரும் அமைப்பாகும்.
இதில் சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள் என சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியவர்களே இந்த நிறுவனத்தை வழிநடத்துகின்றனர் எனவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இருபக்க விவாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்ததுடன் துஆப் பிரார்த்தனை நிகழ்வை நடத்த அனுமதி வழங்கினார். அத்துடன் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக மெஸ்ரோவின் ஸ்தாபகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் கேட்டபோது - மெஸ்ரோ நிறுவனம் அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆப் பிரார்த்தனை நிகழ்வை நடத்த நான்கு நாட்கள் முயற்சித்தபோதும் கல்முனை பொலிஸார் நான்கு நாட்களும் இடையூறு விளைவித்தும் நீதிமன்றத்தின் மூலம் தடைஉத்தரவு பெற்றும் அவர்களின் நிகழ்வை நடத்தாமல் தடுத்து வந்தனர்.
அண்மையில் பொதுபல சேனாவின் கண்டி கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில் பார்க்கும்போது பொலிஸார் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கின்றனர். மெஸ்ரோ நிறுவனம் புத்திஜீவிகளை கொண்டு இயங்கும் நிறுவனமாகும்.
இது முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. அதனடிப்படையில் இன்று இடம்பெறவுள்ள துஆப் பிரார்த்தனை நிகழ்வைத் தடைசெய்ய எடுத்த முயற்சியை நீதிமன்றம் நிராகரித்து வழங்கிய தீர்ப்பினை வரவேற்கின்றேன். - என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply