பிரிட்டனின் பாதுகாப்பு உத்தரவாதம் திருப்தியளிக்காததன் காரணமாகவே கொமன்வெல்த் (பொதுநலவாய) விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என்றும், இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கமாட்டார் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஏன் பங்கேற்கவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய - "பாதுகாப்பு உட்பட பல விடயங்களைக் கருத்திற்கொண்டு கொமன்வெல்த் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை.
அத்துடன், அங்கு பாதுகாப்பு திருப்தி இல்லை என ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவும் ஆலோசனை வழங்கியிருந்தது. எனவே, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. கொமன்வெல்த் போட்டிகளின் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பது பிரச்சினை அல்ல. இதனூடாக ஜனாதிபதி கொமன்வெல்த் போட்டிகளைப் புறக்கணித்துவிட்டார் என்று கருதக்கூடாது" என கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply