கடந்த
சில தினங்களாக நாட்டில் காணப்பட்ட நிலைமைகள் தொடர்பில் கவலையடைவதாக
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கையொன்றை
வெளியிட்டுள்ளார்.உயிர்ச் சேதங்கள், மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் தமக்கு கவலை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 18 மாதங்களில் சட்ட அமுலாக்கம் வீழ்ச்சியடைந்தமை, குரோதங்கள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் சட்டங்கள் மீறப்பட்டமை தமது வருத்தத்திற்கான காரணமென முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இன வன்செயலுடன் அப்போதைய அரசாங்கம் கையாண்ட செயற்பாடுகள் காரணமாக நாடு 25 ஆண்டுகால கொடூர யுத்தத்தை எதிர்கொண்டதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்லினசார் ஜனநாயகத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கை முன்னோக்கி பயணிக்க முடியுமெனவும், சௌபாக்கியத்தை அடைய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் இடம்பெற்ற வன்முறை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மன்னிப்பின்றி சட்டத்தை செயற்படுத்துவதன் தேவையை, அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுமாறு, நாட்டின் தலைவர்களிடமும், பொது மக்களிடமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இலங்கையை மீண்டும் சிவில் யுத்தம் ஒன்றுக்குள் தள்ளி விட, அடிப்படைவாத சிறு குழுக்களுக்கு இடமளிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply